சென்னை: முறையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சட்ட விதிகளை பின்பற்றியே கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் பட்டியலை முறையாக தயாரித்து, அதில் தகுந்த திருத்தம் செய்யும்வரை கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி, தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘இதுதொடர்பாக ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கில் கூட்டுறவு சங்கங்களின் வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகள் 6 மாதங்களில் நிவர்த்தி செய்யப்பட்டு, அதன்பிறகு தேர்தல் நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், கூட்டுறவு சங்கங்களின் வாக்காளர் பட்டியலை சரிசெய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது மீண்டும் தேர்தல் பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது’’ என குற்றம் சாட்டப்பட்டது.
» தீபாவளியையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர 17,587 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ‘‘கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. முறையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சட்ட விதிகளுக்கு உட்பட்டு தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, அதன்பிறகே இந்ததேர்தல் நடத்தப்படும், ஏற்கெனவே கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருந்து இறந்தவர்களின் பெயர்களை, ஒருமாதத்தில் உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக தற்காலிக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆட்சேபங்கள் பெற்று,அதை பரிசீலித்து, அதன்பிறகே இறுதி வாக்களர் பட்டியல் தயாரிக்கப்படும்.
தற்காலிக பட்டியலில் உறுப்பினர்களாக அல்லாதவர்கள் அல்லது இறந்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆட்சேபம் தெரிவிக்கலாம். அனைத்து ஆட்சேபங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்’’ என அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.