சாலை சேதம் அடைந்தால் உடனடியாக சீரமைக்கப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டதிட்டப் பணிகள் பல்வேறு இடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, மேடவாக்கம் – பெரும்பாக்கம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் அனைத்து இடங்களிலும் குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லி முதல் போரூர் வரை சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணிகள்இருபுறமும் நடைபெற்று வருகின்றன. தற்போது பூந்தமல்லி முதல் போரூர் வரை நெடுஞ்சாலையில் 3.7 கி.மீ நீளத்துக்கு சாலை போடப்பட்டு, சீரமைப்புப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஆற்காடு சாலையில் 11.6 கி.மீ. சாலைபோடப்பட்டு, 87 சதவீத சாலை சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அதேபோல, மேடவாக்கம் சாலையில் 2 கி.மீ. நீளத்துக்கு சாலை போடப்பட்டு, 65 சதவீத சாலை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.இந்த சாலைகளில் வாகனங்கள் சுலபமாகச் செல்ல முடியும். திருவொற்றியூர், மாதவரம், மற்றும் ஓ.எம்.ஆர். நெடுஞ்சாலைகளிலும் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் பழுதுபார்க்கப்பட்டு சீரமைக்கப்பட்டுவிட்டன.

வடகிழக்குப் பருவ மழையைக் கருத்தில் கொண்டும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதியும் சாலை சீரமைக்கும் பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதேபோன்று, சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும்அனைத்து இடங்களிலும் சாலைகள் சேதமடைந்தால் உடனேஅந்த சாலைகள் சீரமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE