சென்னை மாநகரின் முக்கிய பகுதியாக சைதாப்பேட்டை விளங்கிவருகிறது. இந்த சைதாப்பேட்டைக்கு உட்பட்ட பகுதிதான் ஸ்ரீநகர் காலனி. கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை என முக்கிய பகுதிகளுக்கு நடுவிலேயே ஸ்ரீநகர் காலனி இருக்கிறது. குறிப்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம், ஆளுநர் மாளிகை, சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம், சைதாப்பேட்டை பேருந்து நிலையம் என பல்வேறு முக்கிய இடங்களுக்கு மையமாக ஸ்ரீநகர் காலனி இருந்தாலும், பேருந்து சேவை என்பது இப்பகுதிக்கு முற்றிலுமாக வழங்கப்படவில்லை என்பதே மக்களின் வேதனையாக உள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த சுமதி கூறியதாவது: ஸ்ரீநகர் காலனியில் நிழற்சாலைகள், மாட வீதிகள் என ஏராளமான தெருக்கள் உள்ளன. இங்குள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். பார்ப்பதற்கு ஏதோ வசதி மிகுந்த மக்கள் வசிக்கும் இடமாக தோற்றமளித்தாலும் அடித்தட்டு மக்களின் வாழ்விடமாக நகர் காலனி விளங்கி வருகிறது.
எனவே, எங்களுக்கு பேருந்து சேவை மிகவும் அத்தியாவசியமான ஒன்று. பேருந்து சேவை இல்லாததால், அண்மையில் கூட ஊருக்குச் சென்று வரும்போது ஆட்டோவுக்கு அதிக கட்டணம் கொடுக்க முடியாமல் திணறினோம். இதுவே பேருந்து சேவை இருந்திருந்தால் அதிகபட்சம் ரூ.50-ல் வீடு வந்து சேர்ந்திருப்போம். ரயிலில் ஒரு நபருக்கு ரூ.400 என்றளவில் ஊருக்குச் சென்ற நாங்கள் சுமார் 1.5 கிமீ தூரத்துக்கு ரூ.250 கொடுத்தே வீடு திரும்பினோம். மாதம் ரூ.35 ஆயிரம் சம்பாதிக்கும் நிலையில் இருக்கும் எங்களுக்கே இதுபோன்ற சம்பவங்கள் இன்னல்களைத் தருகின்றன. இதற்கும் குறைவாக ஊதியம் பெறுவோர் எப்படி இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள முடியும்? எனவே, இப்பகுதி மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேருந்து சேவையின் முக்கியத்துவம் குறித்து தனியார் நிறுவன ஊழியர் கபிலன் கூறியதாவது: எங்கள் பகுதிக்கு அருகிலேயே சைதாப்பேட்டை ரயில் நிலையமும், சின்னமலை மெட்ரோ நிலையமும் அமைந்துள்ளது. ஆனால் இந்த 2 நிலையங்களுக்கு செல்ல பேருந்து வசதி இல்லை. இதனால் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக சின்னமலை மெட்ரோ சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்கு குறைந்தபட்சம் ரூ.100 கொடுக்க வேண்டியுள்ளது.
அதேநேரம் இப்பகுதியில் ஏராளமான பள்ளிகளும் செயல்படுகின்றன. பேருந்து சேவை ஏற்பாடு செய்யும் பட்சத்தில் அப்பள்ளி மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை, சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளுக்கும் சென்று வர உதவிகரமாக இருக்கும். சைதாப்பேட்டை பகுதியை மேம்படுத்த உயர்மட்ட பாலம் உள்ளிட்ட ஏராளமான திட்டப் பணிகளை அரசு முன்னெடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது முற்றிலும் குடியிருப்பு பகுதி என்பதை காரணம் காட்டி, சேவையை வழங்க மறுக்கக் கூடாது. மக்களின் தேவையைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே நகர் காலனியில் இருந்து 2 ரயில் நிலையங்கள் உட்பட அருகில் உள்ள பகுதிகளை இணைக்கும் வகையிலாவது சிற்றுந்து அல்லது பேருந்து சேவையைத் தொடங்க வேண்டும்.
சிக்னல் தேவை: அதே நேரம், சைதாப்பேட்டை தாலுகா அலுவலக சாலையில் நகர் காலனிக்கென சிக்னல் ஒன்று அமைக்க வேண்டும். ஏனெனில் அண்ணாசாலையின் இரு புறத்தில் இருந்தும் வாகனங்கள் வேகமாக வருகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நீதிமன்றம் அருகே சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேருந்து சேவை குறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, "இதுவரை அப்பகுதியில் பேருந்து இயக்கம் குறித்து எந்த திட்டமுமில்லை. இது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்றனர்.