இந்திய எல்லைக்குள் அத்துமீறிய இலங்கை மீனவர்கள் 8 பேர் கைது: கடத்தலில் ஈடுபட்ட மண்டபம் மீனவர் 4 பேர் சிக்கினர்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இந்திய கடல் பரப்புக்குள் அத்துமீறிய 8 இலங்கை மீனவர்களையும், இலங்கைக்கு கடல் அட்டை, மஞ்சள் கடத்த முயன்ற மண்டபம் மீனவர்கள் 4 பேரையும் இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

மண்டபம் கடலோர காவல்படையினரும், ராமநாதபுரம் சுங்கத் துறையினரும் இணைந்து கடத்தல் தடுப்பு நடவடிக்கைக்காக தனுஷ்கோடியிலிருந்து 27 கடல் மைல் தொலைவில் மன்னார் வளைகுடா கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய கடற்பரப்புக்குள் நுழைந்த 4 பைபர் படகையும் அதிலிருந்து இலங்கையைச் சேர்ந்த 8 பேரையும், மண்டபம் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகையும் அதிலிருந்த 4 பேரையும் சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்டதாகக் கைது செய்தனர்.

கைதான இலங்கையைச் சேர்ந்த 8 பேர் மண்டபம் மெரைன் போலீஸாரிடமும், நாட்டுப்படகிலிருந்து 4 பேர், அதில் கைப்பற்றப்பட்ட 330 கிலோ கடல் அட்டை மற்றும் 594 கிலோ மஞ்சளையும் சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் இலங்கை புத்தளம் மாவட்டம் கல்பிட்டியைச் சேர்ந்த மில்ராய்பெர்னாந்து, சில்வெஸ்டர், ஜூட் மென்சன்லோக், பிரசாத் ரங்க குமார், தினேஷ் ஜீவந்த், ஆண்டனி ரோக்சன், ரெமண்ட்டயஸ், பெர்னாண்டோ ஆகியோர் எனத்தெரிய வந்தது. மேலும், நாட்டுப்படகிலிருந்தவர்கள் மண்டபம் வாசிம், முகையதீன், மரைக்காயர்பட்டினம் உபையதுல்லா, ஈசாக் எனவும் தெரியவந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE