13 ஆண்டு பணியில் 12 முறை இடமாறுதல்: வருவாய் ஆய்வாளரை மீண்டும் பணியில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: பணியில் சேர்ந்த 13 ஆண்டுகளில் 12 முறை இடமாறுதல் செய்யப்பட்டு இறுதியில் பணி நீக்கம் செய்யப்பட்ட வருவாய் ஆய்வாளரை மீண்டும் பணியில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு. என் தந்தை விஸ்வாம்பரன் கிராம உதவியாளராக பணிபுரித்தார். அவர் பணியில் இருந்தபோது இறந்தார். இதனால் எனக்கு கருணை அடிப்படையில் 13.12.2006-ல் கிராம உதவியாளர் பணி வழங்கப்பட்டது. 13 ஆண்டுகளில் என்னை 12 முறை இடமாறுதல் செய்தனர். வட்ட வழங்கல் துறையில் பறக்கும் படையில் சிறப்பு வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தேன்.

இந்நிலையில், என்னை விளவங்கோடு சிறப்பு வட்டாட்சியர் அலுவலக இளநிலை உதவியாளராக இடமாறுதல் செய்து ஆட்சியரின் நேர்முக உதவியாளர் 30.12.2021-ல் உத்தரவிட்டார். இந்த இடமாறுதலை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதனால் எனக்கு 17.5.2022-ல் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது.

பின்னர் என்னை பணி நீக்கம் செய்து குமரி மாவட்ட ஆட்சியர் 26.1.2023-ல் உத்தரவிட்டார். எனவே, இடமாறுதல் உத்தரவு, குற்றச்சாட்டு குறிப்பாணை, பணி நீக்க உத்தரவை ரத்து செய்து என்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் கே.பி.கிருஷ்ணதாஸ் வாதிடுகையில், 'மனுதாரர் பணியில் சேர்ந்ததில் இருந்து 12 முறை இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவரை எந்த இடத்திலும் தொடர்ந்து 3 ஆண்டு பணியாற்ற அனுமதிக்கவில்லை. அடிக்கடி இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. பறக்கும் படையில் சிறப்பாக செயல்பட்டு ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் கேரளாவிற்கு கடத்துவதை தடுத்ததை பாராட்டி குடியரசு தினவிழாவில் ஆட்சியரால் விருது வழங்கப்பட்டது என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு மனுதாரரை இளநிலை வருவாய் ஆய்வாளராக மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். மனுதாரர் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக வட்டாட்சியர் தகுதியில் அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும். மனுதாரர் விளக்கமளிக்கவும், சம்பந்தப்பட்டோரிடம் குறுக்கு விசாரணை நடத்தவும் விசாரணை அதிகாரி வாய்ப்பளிக்க வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு ஒழுங்கு நடவடிக்கையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும். மனுதாரர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE