சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்:நேற்று (அக்.22) காலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (அக்.23) காலை 8.30 மணி அளவில் அதே இடத்தில் நிலவுகிறது. இது பரதீப் (ஒடிசா)-க்கு தெற்கே சுமார் 360 கி.மீட்டர் தொலைவிலும், டிகா (மே.வங்கம்)-க்கு தெற்கே தென் மேற்கே சுமார் 510 கி.மீட்டர் தொலைவிலும் நிலவுகிறது. இது வடக்கு வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை நோக்கி அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்.
நேற்று (அக்.22) மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர தேஜ் புயல் இன்று (அக்.23) காலை 8.30 மணி அளவில் வலு குறைந்து மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவுகிறது. இதுமேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அக்.24 அன்று மிக தீவிர புயலாக ஏமன் கடற்கரையைக் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று (அக்.23) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்.24 ஆம் தேதி, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அக்.25 ஆம் தேதி, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அக்.26 முதல் அக்.29 ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 - 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.