உயர்ந்த தியாகங்களை தேசம் என்றும் நினைவுகூர்கிறது: காவலர் வீரவணக்க நாளுக்கு ஆளுநர், முதல்வர் புகழாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: காவலர் வீரவணக்க நாளில், அவர்களது உயர்ந்த தியாகங்களை தேசம் என்றும் நினைவுகூர்கிறது என ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

லடாக் பகுதியில் 1959-ம் ஆண்டுநடைபெற்ற சீனப்படை தாக்குதலின்போது, இந்திய காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட 10 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களது தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அக்.21-ம் தேதி காவல்துறை சார்பில்வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செய்யப்படும்.

இதையொட்டி, தமிழக ஆளுநர்,முதல்வர் மற்றும் பல்வேறு தலைவர்கள் காவலர்களின் தியாகங்களுக்கு வீரவணக்கத்துடன் புகழாரம் சூட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி: காவலர் வீரவணக்க நாளில் நமது தாயகத்தை காக்க இன்னுயிர் ஈந்த நம் வீரமிக்க காவலர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறோம். இடைவிடா கண்காணிப்பு, உயிர்தியாகம் மூலம்நமது பாதுகாப்பு, அமைதி, தேசவளர்ச்சியை உறுதி செய்யும் அனைத்து பாதுகாப்பு படையினருக்கும் நாம் பெருமையுடன் தலை வணங்குவோம்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: 1959-ல்நடந்த சீனத் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த 10 மத்திய ரிசர்வ்காவல் படை வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அவர்களின் உயர்ந்த தியாகங்களை தேசம் என்றும் நினைவுகூர்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பொதுமக்களின் நிம்மதியான வாழ்க்கை, நாட்டின் வளர்ச்சிக்காக, தம் உயிரையும் பணயம் வைத்து நம்மைப் பாதுகாப்பவர்கள் கடமைஉணர்வுமிக்க காவல்துறையினர். அவர்களது தியாகங்களுக்கு காவலர் வீரவணக்க நாளில் எனது வீரவணக்கங்கள்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: காவலர் வீரவணக்க நாளில் பாரதத்துக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த வீரம் மிக்க காவலர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கங்கள். இந்நாளில், காவல்துறையினரின் தியாகங்களையும், தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதில் அவர்களின் முக்கிய பங்கையும் அங்கீகரிப்பதில் பெருமிதம் கொள்வோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி: சென்னையில், டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் பணியின்போது வீரமரணம் அடைந்த 188 காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், தமிழக காவல் துறை உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல் உயர் அதிகாரிகள், போலீஸாரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, உயிரிழந்த காவலர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE