அக்.23-ல் திமுக அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: வருகிற 23.10.2023 திங்கட்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில், திமுகவின் அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள திமுக அழைப்பு விடுத்துள்ளது.

அது தொடர்பாக அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை ஒன்றிய அரசுக்கு உணர்த்தும் வகையில், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில், திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் “நீட் விலக்கு, நம் இலக்கு” எனும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை 21.10.2023 அன்று காலை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து முதல் கையெழுத்திட்டார்.

நீட் தேர்வு விலக்கினை மக்கள் போராட்டமாக மாற்றும் வகையில், இக்கையெழுத்து இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக, தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமம் முதல் பட்டணக்கரை கொண்டு சென்றிட ஏதுவாக, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், வருகிற 23.10.2023 திங்கட்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில், “தி.மு.க அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம்” காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.

இந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் கழக அனைத்து அணிச் செயலாளர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக: நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மத்திய அரசு நீட் விவகாரத்தில் அலட்சியம் காட்டினால் ஜல்லிக்கட்டு போன்ற வீரமிக்க ஒரு போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE