ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக கிறிஸ்தவ முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில், சென்னிமலை முருகன் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கிறிஸ்தவ முன்னணி நிர்வாகியான சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த மதபோதகர் ஸ்டீபன் ஆகியோர் மீது, மத மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சென்னிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில், சென்னையில் இருந்த ஜோசப் என்கிற சரவணனை கடந்த 18-ம் தேதி சென்னிமலை போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்தமதபோதகர் ஸ்டீபன்(40) என்பவரை நேற்று முன்தினம் இரவு போலீஸார் கைது செய்தனர். ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்டீபன், பின்னர் கோபிசெட்டிப்பாளையம் சிறையில் அடைக்கப்பட்டார்.