மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பலன் அடைவார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்தகவலை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மத்திய அரசின் ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு தற்போது 42 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது உயர்த்தப்பட்டதன் மூலம் அது 46 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த உயர்வால் 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 67.95 லட்சம் ஓய்வூதியர்கள் பலனடைவார்கள்.

2024-25 ராபி சந்தை பருவத்தில் சந்தைப்படுத்தப்படும் 2023-24-ம் ஆண்டின் 6 ராபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன்படி கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு குவின்டாலுக்கு ரூ.150 அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE