இஸ்ரேலில் இருந்து இதுவரை 147 பேர் தமிழகம் வருகை: மாநில அரசு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: இஸ்ரேலில் இருந்து இதுவரை 121 பேர் தமிழக அரசின் செலவிலும், 26 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் என 147 பேர் தமிழகம் வந்தடைந்துள்ளனர் என்று தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்த நிலையில், தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 158 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களுடன் தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் தேவைகள் கண்டறியபட்டது. அதன் அடிப்படையில் , இதுவரை நான்கு கட்டங்களாக புது டெல்லி வந்த 98 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழக அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று (அக்.17) நள்ளிரவு இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் முலம் புதுடெல்லி வந்தடைந்த 23 தமிழர்கள் தமிழக அரசினால் வரவேற்கப்பட்டு, விமான பயணச்சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டது, கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த 4 நபர்களை தமிழக அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றம் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசின் செலவில் ஏற்பாடு செய்த வாகனங்களில் அனுப்பி வைத்தார்.

மேலும் சென்னை விமான நிலையம் வந்த 17 நபர்களை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மற்றும் துறை அலுவலர்கள் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். அதே போன்று மதுரை விமான நிலையம் வந்த 2 நபர்கள் மாவட்ட நிர்வாகத்தால் வரவேற்கப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைத்தனர்.

இதுவரை, இந்நேர்வில் இஸ்ரேலில் இருந்து 121 பேர் தமிழக அரசின் செலவிலும், 26 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழகம் வந்தடைந்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE