நாமக்கல்: “நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தடுப்பதற்காக அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (அக்.17) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "இரண்டு திராவிட கட்சிகளுக்கு இடையே கோட்டையாக விளங்கும் நாம் தமிழர் கட்சி மக்களை நம்புகிறது. அதன் மூலம் நாட்டை ஆளும் செல்வாக்கை விரைவில் எதிர்பார்ப்போம். ஜெயிலர் படம் வெளியாகும்போது அந்தப் படத்துக்கு இந்த நெருக்கடி இல்லை. நடிகர் விஜய் படத்துக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு. ஏனென்றால், தம்பி விஜய் அரசியலுக்கு வரப்போகிறார். அதைத் தெரிந்துகொண்ட அரசு இந்த நெருக்கடியை கொடுத்து வருகிறது.
மக்களுக்கு நன்மை பயக்காத திராவிட கட்சிகளை நாங்கள் அழிப்போம். தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சியினர் ஊர்வலம் நடத்துவது இயல்புதான். ஆனால், எந்த நோக்கத்துக்காக என்று ஒரு காரணம் இருக்கும். ஆனால், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் நடத்தும் பேரணி எந்த நோக்கத்துக்காக? அந்தப் பேரணி அவசியமற்றது” என்றார் சீமான்.