சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்களா? - நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்களும் அமைந்துள்ள பகுதியில் எந்த அனுமதியும் பெறாமல் நந்தவனங்கள் அமைக்கப்படுவதாகவும், கோயிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களில் எந்த அனுமதியுமின்றி நூறு அறைகள் கட்டப்படுவதாகவும் கூறி, கோயில் தீட்சிதரான நடராஜ் தீட்சிதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், நந்தவனம் அமைப்பதற்காக நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. அதனால் பொது தீட்சிதர்கள் குழுவால் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தரப்பிலும், தமிழக தொல்லியல் துறை தரப்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், கோயிலில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE