இலங்கை கடற்படை கைது செய்த 27 மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்கள் மற்றும் அவர்கள் படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், இருவேறு சம்பவங்களில் 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. அக்.14-ம் தேதி 4 படகுகளில் ராமேசுவரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள், மற்றும் வேறுஒரு விசைப்படகில் சென்ற 4 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நான் ஏற்கெனவே எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததைப் போல், தொடர்ச்சியாக இதுபோன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள மீனவர்கள் கைது செய்யப்படுவதால், மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரம் பாதிப்பு: இதுபோன்ற சம்பவங்களால் மீனவ சமுதாயக் குடும்பத்தினருக்குப் பொருளாதார இழப்புகள் ஏற்படுவதுடன், இத்தொழிலை நம்பியுள்ள எண்ணற்ற குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக தூதரக அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE