வாச்சாத்தி வழக்கில் தண்டனையை எதிர்த்த 2 வனத்துறை அதிகாரிகளின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து வனத்துறை உயர் அதிகாரிகள் 2 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தருமபுரி மாவட்டம் கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள வாச்சாத்தி மலை கிராமத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாகக்கூறி கடந்த 1992-ல்வருவாய் துறை, வனத்துறை, காவல் துறையினர் கூட்டாக சோதனை நடத்தினர். அப்போது வாச்சாத்தியில் உள்ள 18 பழங்குடியின பெண்களை வனத்துறை, காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கடந்த 1995-ம் ஆண்டு ஐஎஃப்எஸ் அதிகாரிகள் உட்பட 269 அரசு அலுவலர்கள், அரசு ஊழியர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2011 செப்.29-ம் தேதி, அப்போது உயிருடன் இருந்த 215 பேரைகுற்றவாளிகள் என அறிவித்து தருமபுரிமாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமரகுரு தீர்ப்பளித்தார். அதன்படி, வனத்துறை அதிகாரிகள் உட்பட 12 பேருக்கு 10 ஆண்டுசிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுசிறை தண்டனையும், மற்றவர்களுக்கு1 முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிபி.வேல்முருகன் கடந்த செப்.29-ம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அரசு வேலையுடன் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும், இந்த குற்றத்தை மூடிமறைத்த அப்போதைய தருமபுரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஐஎஃப்எஸ் அதிகாரிகளான எல்.நாதன், பாலாஜி ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

நீதிபதி கே.வி.விஸ்வநாதன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில்மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.நாகமுத்து, குரு கிருஷ்ணகுமார் ஆகியோர், ‘‘அதிகாரிகள் பழிவாங்கும் நோக்குடன் சிக்க வைக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் 2 அதிகாரிகளின் மேல்முறையீட்டு மனுக்களையும் ஏற்கமுடியாது என்பதால் தள்ளுபடி செய்கிறோம். ஐஎஃப்எஸ் அதிகாரிகளானஎல்.நாதன் 6 வார காலத்திலும், பாலாஜி5 வார காலத்திலும் தருமபுரி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE