சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனேநிரப்ப வேண்டும் எனத் தமிழ்நாடு தனியார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தனியார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 499 ஆசிரியர்பணியிடங்களில், 50 சதவீத பணியிடங்களை வரும் 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு பள்ளிக்கூடம் கட்டிடம் இல்லாமல், கரும்பலகை இல்லாமல் கூட இயங்க முடியும். ஆனால், ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கவே முடியாது.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பெரும் எண்ணிக்கையில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும், தலைநகர் சென்னையிலேயே மாநகராட்சி பள்ளிகளில் 499 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி கவனம் செலுத்தி, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.