காவிரி போராட்டங்களில்  வரம்பு மீறல் இருக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை

By கி.மகாராஜன் 


மதுரை: காவிரி போராட்டங்களில் வரம்புகளை மீறி செயல்படக் கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாகண்ணு உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை திறக்க கர்நாடகா அரசு மற்றும் மத்திய அரசை வலியுறுத்தி 4 வாரங்கள் தொடர் போராட்டம் நடத்தவும், போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர்கள் வாதிடுகையில், மனுதாரர் சங்கத்தினர் போராட்டம் என்ற பெயரில் காவிரி ஆற்றில் இறங்கி கர்நாடகாவுக்கு எதிராக பாடை கட்டி, ஈமச்சடங்கு நடத்துகின்றனர். இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

இதையடுத்து நீதிபதி, காவிரி உரிமைக்காக போராட்டம் நடத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியது. அந்தப் போராட்டங்களில் வரம்புகள் மீறப்படக் கூடாது. நீதிமன்ற உத்தரவுகளை மதித்து போராட்டம் நடத்தலாம். மனு குறித்து அரசு தரப்பில் அக்.31-ல் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE