புதுச்சேரி: புதுச்சேரியில் 7 ஆண்டுகளாக வக்பு வாரியம் இல்லாததால் உடன் அமைக்கக் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. உடனடியாக வக்பு வாரியம் அமைக்காவிட்டால் மாநிலம் தழுவிய பல போராட்டங்களை நடத்துவோம் என்று அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் கூறியுள்ளார்.
முஸ்லிம் சமுதாய மக்களின் நலனுக்காக உடனே வக்பு வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று வெங்கடாசலப் பிள்ளை வீதியில் உள்ள வஃபு அலுவலகம் எதிரில் நடந்தது. இப்போராட்டத்துக்கு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்து பேசியது: "புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2016-2021, 5 ஆண்டு கால காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியிலும், தற்போதைய 2 ஆண்டு கால பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் ஏறத்தாழ 7 ஆண்டுகளாக வக்பு வாரியம் அமைக்கப்படவில்லை.
இதனால், இஸ்லாமிய சமுதாய மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதிலும், கல்வி கட்டண உதவிகள் பெறுதலிலும், அரசின் மூலம் சிறு கடன் உதவி பெறுவதிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 7 ஆண்டு காலமாக முஸ்லிம் சமுதாய மக்களுக்கு சிறுகடன்கள் வழங்கும் திட்டம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள வக்பு வாரிய சொத்துக்கள் பல்வேறு அரசியல் பின்னணி உள்ளவர்களால் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
ஆளும் என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியிலும் இதுவரை வக்பு வாரியத்தை அமைக்காமல் இஸ்லாமிய சமுதாயத்தை வஞ்சித்து வருகிறது. சிறுபான்மை மக்களுடைய நலனுக்கு உற்ற தோழனாக இருப்பது அதிமுக மட்டுமே. வக்பு வாரியம் அமைக்காவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் சிறுபான்மை மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை அதிமுக முன்னெடுத்து செல்லும்" என்று குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் முன்னாள் எம் எல்ஏ பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.