தமிழகத்தில் 6 டெமு, 2 விரைவு ரயில்களுக்கு பதிலாக நவ.1 முதல் மெமு ரயில்களை இயக்க முடிவு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஓடும் ஆறு டெமு ரயில்கள் (டீசல் இன்ஜின் மூலம் ஓடும் ரயில்), 2 விரைவு ரயில்கள் ஆகியவற்றை அக்.31-ம் தேதியுடன் நிறுத்திவிட்டு, மின்சாரத்தில் இயங்கும் மெமு ரயில்களாக இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்திய ரயில்வேயில் மின்மயமாக்கல் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்கு ஏற்ப, டீசல் இன்ஜின் மூலமாக இயங்கும் டெமு ரயில்களை நீக்கிவிட்டு, மின்சாரத்தில் இயங்கும் மெமு ரயில்களை அறிமுகப்படுத்தப்படுகிறது. மெமு ரயில் பொருத்தவரை, மின்சாரத்தை பயன்படுத்தி குறுகிய மற்றும் நடுத்தர தொலைவுக்கு இயங்கக்கூடிய ரயிலாகும். நகர்புறங்களில் இ.எம்.யூ என மின்சார ரயில்களாக இயங்குகின்றன.

இந்நிலையில், ஆறு டெமு ரயில்கள், 2 விரைவு ரயில்கள் ஆகியவற்றை அக்.31-ம் தேதியுடன் நிறுத்திவிட்டு, அதற்குபதிலாக மெமு ரயில்களாக இயக்க ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன் விவரம் வருமாறு: திருச்சியில் இருந்து கரூர், ஈரோடு, கோவை வழியாக பாலக்காடுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்(16843), பாலக்காடு-திருச்சிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்(16844), திருச்சி-வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் டெமு ரயில்(06840), வேளாங்கண்ணி-திருச்சிக்கு இயக்கப்படும் மெமு ரயில் (06839), நாகப்பட்டினம்-வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் டெமு ரயில் (06841), வேளாங்கண்ணி- நாகப்பட்டினத்துக்கு இயக் கப்படும் டெமு ரயில் (06842), நாகப்பட்டினம்-காரைக்காலுக்கு இயக்கப்படும் டெமு ரயில்(06898), காரைக்கால்-நாகப்பட்டினத்துக்கு இயக்கப்படும் டெமு ரயில் (06897) ஆகிய 6 டெமு ரயில்கள் அக்.31-ம் தேதிக்கு பிறகு ஓடாது.

இந்த ரயில்களுக்கு மாற்றாக மெமு ரயில்களாக இயக்கப்பட உள்ளன. இந்த மெமு ரயில்கள் தலா 8 பெட்டிகளை கொண்டதாக இருக்கும். இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE