கனகசபை விவகாரம் | சிதம்பரம் நடராஜர் சந்நிதி தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என அறநிலையத் துறை பதில் மனு

By செய்திப்பிரிவு

சென்னை: சிதம்பரம் நடராஜர் சந்நிதி கனகசபையில் இருந்து பக்தர்கள் ஆண்டாண்டுகாலமாக சுவாமி தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் சந்நிதி கனகசபையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 2022 மே 17 அன்று பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தலைமையிலான அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கே.வி.முரளிதரன் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

சிதம்பரம் நடராஜர் சந்நிதி கனகசபையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் நடைமுறை ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு மீண்டும் பக்தர்களை அனுமதிக்கும் விதமாகவே அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையால் தீட்சிதர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் கூறுகிறார். ஆனால், அவர் தீட்சிதர் கிடையாது. தீட்சிதர்கள் யாரும் இந்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடரவில்லை.

மேலும், சிதம்பரம் நடராஜர் சந்நிதி சோழ மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட கோயில். இதுபொது கோயில் என்பதை உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் உறுதி செய்துள்ளன.

அதேபோல, கோயில் சொத்துக்களுக்கும், தீட்சிதர்களு்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கோயில்பெயரில் உள்ள தங்கத்தை சரிபார்ப்பதற்கும்கூட அறநிலையத் துறைஅதிகாரிகளை தீட்சிதர்கள் அனுமதிப்பதில்லை. பொதுமக்களை கனகசபையில் இருந்து தரிசனம் செய்ய எதிர்ப்புத் தெரிவிக்கும் வேளையில், தீட்சிதர்கள் மற்றும்அவர்கள் கூட்டி வரும் நபர்கள்மட்டும் கனகசபையில் இருந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இது பக்தர்களிடையே பாகுபாடு பார்ப்பதுபோல உள்ளது என்பதால்தான், அனைத்து பக்தர்களும் கனகசபையில் இருந்து தரிசனம் செய்ய அனுமதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

பக்தர்கள் ஆண்டாண்டு காலமாக கனகசபையில் இருந்து சுவாமி தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் கோரியுள்ளார்.

இந்த பதில் மனுவுக்கு மனுதாரர் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரியதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் டிச.12-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE