தமிழகம் முழுவதும் சிறப்பு லோக்-அதாலத் - பாதிக்கப்பட்டோருக்கு ரூ.187 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற சிறப்பு லோக்-அதாலத்தில், ரூ. 186.73 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுத்தலைவருமான எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும், மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு செயல்தலைவருமான எஸ்.வைத்தியநாதன், உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மூத்த நீதிபதியுமான டி.கிருஷ்ணகுமார் ஆகியோரது அறிவுறுத்தல்படி, குடும்பப் பிரச்சினைகள் தொடர்பான நிலுவை வழக்குகளுக்கான சிறப்பு லோக்-அதாலத் மாநிலம் முழுவதும் நேற்று நடத்தப்பட்டது.

இதில், அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளால் நேரிட்ட விபத்து வழக்குகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில்தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.பரத சக்ரவர்த்தி, பி.தனபால், சி.குமரப்பன் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் ஆகியோரது தலைமையிலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி ஆகியோரது தலைமையிலும் அமர்வுகள் அமைக்கப்பட்டு, நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதேபோல, மாநிலம் முழுவதும் 194 அமர்வுகளில் மொத்தம் 8 ஆயிரத்து 92 வழக்குகளுக்குத் தீர்வுகாணப்பட்டு, பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு ரூ.186.73 கோடி இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர்-செயலரும், மாவட்ட நீதிபதியுமான ஏ.நசீர் அகமது, உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், மாவட்ட நீதிபதியுமான கே.சுதா ஆகியோர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE