காலை உணவுத் திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த விரிவான ஆய்வு: ஐகோர்ட்டில் அரசு தகவல்

By கி.மகாராஜன் 


மதுரை: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டு செல்வதற்காக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் நிநிநிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் இனிவரும் காலத்தில், இத்திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேசில் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,"மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த நான், மீனவ மக்களின் கல்வி, வளர்ச்சி மற்றும் வாழ்வாதரப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறேன். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை, தமிழக அரசு கடந்தாண்டு செப்டம்பர் முதல் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் 31,000 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தபப்டுவது இல்லை.

இயற்கை சீற்றங்கள் மற்றும் சூழல் சார்ந்த பிரச்சினைகளால் பல நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத சூழலில், கடலோர மீனவ மக்களின் பொருளாதார நிலை மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதனால் உருவாகும் ஏழ்மை நிலை காரணமாக, மீனவ சமுதாயத்தைச் சேர்ந் குழந்தைகள் தங்களது கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். எனவே, கடலோரப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் சூழல் உருவாகும். எனவே, கடலோரப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டு கடந்த 15.09.2022 முதல் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்துப் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை கொண்டு செல்வதற்காக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசின் நிநிநிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் இனிவரும் காலத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE