கொள்ளிடம் ஆறு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை 3-வது நாளாக சோதனை

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உள்ள மணல் குவாரிகளில் மூன்றாவது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட, அதிக அளவில் மணல் அள்ளப்பட்டுள்ளதாகவும், முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதைக் கண்டறியும் நோக்கில் அமலாக்கத் துறையினர் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் குவாரிகள் மட்டுமின்றி குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மருவூர் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியில் 11-ம் தேதி மாலை அமலாக்கத் துறையினர் ட்ரோன் பயன்படுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, பலத்த காற்று வீசியதால் ட்ரோனை பறக்கவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், சோதனையை பாதியிலேயே நிறுத்திவிட்டு அமலாக்கத் துறையினர் புறப்பட்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை (அக்.12) 2-வது நாளாக கொள்ளிடம் ஆற்றில் மரூரிலும், முதன்முறையாக திருச்சென்னம்பூண்டி, புத்தூர் ஆகிய இடங்களிலும் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினர் ட்ரோன் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலைமுதல் 3-வது நாளாக புத்தூர் குவாரியில் அமலாக்கத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE