“உதயநிதி ஸ்டார் என்பதால் அவரது துறையும் ‘ஸ்டார்’ துறையாக வளர்ச்சி” - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: "சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்கங்களில் 28 பதக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்து பெற்றுள்ளோம்" என ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சார்ந்த வீரர் - வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர்கள் பல்வேறு பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளார்கள் என்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியா மொத்தமாக வென்ற 107 பதக்கங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் 28 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இந்திய அளவில் பார்த்தால் நமது மாநிலம் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. பதக்கங்கள் வென்ற 20 விளையாட்டு வீரர்களுக்கு 9 கோடியே 40 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை பரிசுகள் வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி. இந்தியா மற்றும் உலகளாவிய போட்டிகளில் தொடர்ந்து உங்களது பங்களிப்பை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். தொடர்ச்சியான பதக்கங்கள் பெறுவதும், தொடர் வெற்றிகளைப் பெறுவதும்தான் உங்களுக்கும் பெருமை; தமிழ்நாட்டுக்கும் பெருமை; ஏன் இந்தியாவிற்கே பெருமை!

எந்தவொரு அரசாக இருந்தாலும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஒரு சில துறைகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தும். ஆனால் திராவிட மாடல் அரசு, அனைத்துத் துறைகளிலும் அதிகக் கவனம் செலுத்தி, அனைத்துத் துறைகளையும் ஒருசேர வளர்த்து வந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சில துறைகள் ஸ்டார் துறைகளாக வளர்ந்து வருகின்றன. அதில் விளையாட்டுத் துறையும் ஒன்று!

இந்தத் துறையின் அமைச்சர் ஒரு ஸ்டாராக இருப்பதால், இந்த துறையும் ஸ்டார் துறையாக வளர்ந்துவிட்டது. விளையாட்டுத் துறையின் மூலமாக, விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இளைய சமுதாயமும் எழுச்சி பெற்று வருகிறது. நாள்தோறும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான விளையாட்டுத் துறை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும், அமைச்சர் உதயநிதி நடந்து அல்ல, ஓடிக் கொண்டே இருக்கிறார்.

அந்தத் துறையின் கேப்டனாக இருந்து, அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழக விளையாட்டுத் துறை உலகமே வியந்து பார்க்கும் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளது. அதில் மிக முக்கியமானது 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி. இனி யாரும் இப்படி நடத்த முடியாது என்று சொல்லத்தக்க வகையில் மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.

தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2023 தமிழகத்தில் நடைபெற உள்ளது. விளையாட்டு உள்கட்டமைப்பில் அரசு அதிநவீன கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. சென்னையில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளது. ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள கிராமங்களில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. சட்டமன்றத் தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கங்களை அரசு அமைத்துவருகிறது. ஒருபுறம் துவக்க நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களையும், மறுபுறத்தில் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களையும் ஊக்குவிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE