தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் ரத்து: அமைச்சர் உடனான பேச்சுக்குப் பின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை நடத்தவிருந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடன் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பான டிட்டோஜாக் அறிவித்துள்ளது.

முன்னதாக, பள்ளிக் கல்வித் துறையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் டிபிஐ வளாகத்தில் திட்டமிட்டபடி நாளை (அக்.13) போராட்டம் நடைபெறும் என்று டிட்டோஜாக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

பின்னணி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடல், எமிஸ் பதிவேற்றம் பணிகளில் இருந்து விடுவித்தல் என்பன உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில் சென்னையில் நாளை (அக்.13) போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தது.

இதையடுத்து டிட்டோஜாக் குழுவில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் செ.முத்துசாமி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தாஸ், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் வரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

ஆசிரியர்கள் முன்வைத்த 30-ல் 9 கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித்துறை அதிகாரிகள் முன்வந்தனர். ஆனால், அதற்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் வழங்கவும், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிக்கையாக வெளியிட வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கூறினர். இல்லையெனில் திட்டமிட்டபடி டிபிஐ வளாகத்தில் நாளை போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், அமைச்சர் உடனான பேச்சுவார்த்தைக்குப் பின், இந்தப் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE