ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு

By என்.சன்னாசி

மதுரை: வரிச்சியூர் செல்வம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். இவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த ஜாமீன் மனு: கடந்த செப்டம்பர் மாதம் சுகந்தா என்பவர், கூலி வேலைக்காக வெளியூர் சென்ற தனது கணவர் புவனேஸ்வரன் வீடு திரும்பவில்லை என விருதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் மனுதாரர் குறித்து எந்தவித தகவலும் இடம் பெறவில்லை. ஆனால், காவல் துறை உள்நோக்கத்துடன் செயல்பட்டு ஆள் காணவில்லை என புகார் அளிக்கப்படும் அனைத்து வழக்குகளிலும் என்னை வழக்கில் சேர்த்து கைது செய்கிறார்கள்.

மேலும், 5 ஆண்டாக தன் மீது எவ்வித புதிய வழக்குகள் பதியவில்லை. ஆள் காணவில்லை என கூறும் வழக்கில் எனக்கும் எவ்வித சம்பந்தம் இன்றி என்னை வழக்கில் சேர்த்து கைதாகி தற்போது சிறையில் உள்ளதால், எனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இம்மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது, காவல் துறை தரப்பில், மனுதாரர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் களைக்கப்பட்டு வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE