சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள் எப்போது நியமிக்கப்படுவர் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க நவம்பர் 8-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு தாக்கல் செய்த மனுவில், "தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியிலிருந்து காலியாக உள்ளன. இதன் காரணமாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை. எனவே, ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைவர் நியமிக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம் உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்பட்டார், என தெரிவிக்கப்பட்டது.
அப்போது, ஆணையத்தில் எத்தனை பேர் இடம் பெற்றிருக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் ஐந்து உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆணையத்துக்கு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள் எப்போது நியமிக்கப்படுவர் என கேள்வி எழுப்பி, இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.