இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர் 17 பேர் தாயகம் திரும்பினர்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: கடந்த செப். 12-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில்இருந்து அந்தோணி என்பவரது விசைப்படகில் சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள்எல்லை தாண்டி வந்ததாகக் கூறி,இலங்கை கடற்படையினர் 8பேரைக் கைது செய்து, விசைப்படகை பறிமுதல் செய்தனர்.

மேலும், அதே பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து வந்த 5 மீனவர்கள், கோட்டைப்பட்டினத்திலிருந்து வந்த 4 மீனவர்கள் என மொத்தம்17 பேரை கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

யாழ்ப்பாணம் ஊர்காவல் துறைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 17 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 மீனவர்கள் நேற்று விமானம் மூலம் கொழும்புவிலிருந்து புறப்பட்டு, சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத் துறையினர் தனி வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.

இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முனைக்காடு கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் காலை இலங்கையைச் சேர்ந்த ஃபைபர் படகு நிறுத்தப்பட்டிருப்பதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. அந்தப் படகை கைப்பற்றி மண்டபம் மெரைன் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

படகில் வந்த இருவர் மண்டபம் பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சட்டவிரோதமாக படகில் வந்த மன்னார் ஜெகன் (28), நாகேந்திரன் (50) ஆகியோரையும், அவர்களுக்கு உதவியதாக மண்டபம் முகாமில் வசிக்கும் ராபின்சன் (26) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE