போலி பணி நியமன ஆணை வழங்கிய குற்றத்தை சாதாரணமாக கருத முடியாது: உயர் நீதிமன்றம்

By கி.மகாராஜன் 


மதுரை: ''போலி பணி நியமன ஆணை வழங்கிய குற்றச்சாட்டை சாதாரணமானதாக கருத முடியாது'' என எனக் கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது உயர் நீதிமன்றம்.

தேனி பெரியகுளத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். பட்டய படிப்பு முடித்துள்ளார். இவரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி மணிகண்டன் என்பவர் ரூ.3 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு, பணி நியமன ஆணை ஒன்றை வழங்கி, பணியில் சேர வேண்டிய நாளை பின்னர் தெரிவிப்பதாக கூறியுள்ளார். பின்னர் அந்த பணி நியமன ஆணை போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார் ரமேஷ். அவர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் ரமேஷ் தென்கரை போலீஸில் புகார் அளித்தார். மணிகண்டன் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மணிகண்டன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் புகார்தாரரை சந்திரமவுலி என்பவரிடம் அறிமுகம் செய்ததை விட எனக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை. அந்த சந்திரமவுலி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார். முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு: ''மனுதாரர் விசாரணைக்கு ஆஜராகி புகார்தாரரிடம் வாங்கிய பணத்தை சந்திரமவுலியிடம் கொடுத்ததாக கூறியுள்ளார். இதனால் சந்திரமவுலியையும் வழக்கில் சேர்க்க வேண்டும். புகார்தாரரை மனுதாரர் சென்னைக்கு அழைத்துச் சென்று போலி பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார்.

போலி பணி நியமன ஆணை வழங்கிய குற்றச்சாட்டை சாதாரணமாக கருத முடியாது. இதுபோன்ற மோசடிகளை ஊக்குவிக்க முடியாது. மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முகாந்திரம் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE