கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம் குறிச்சி பகுதியில் விநோத நோயால் 100 ஏக்கர் சம்பா பயிர்கள், தீயில் கருகியது போல காணப்படுகின்றன. இவற்றுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிச்சியில் 400-க்கும் அதிகமான விவசாயிகள் ஆண்டுதோறும் மின் மோட்டார் பயன்படுத்தி 1,000 ஏக்கரில் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். நிகழாண்டு கடந்த 40 நாட்களுக்கு முன்பு, நாற்று பறித்து, சம்பா நடவுப் பணியைத் தொடங்கினர். பயிர்கள் வளர்ந்து வந்த நிலையில், திடீரென பயிர்கள் தீயில் கருகியதுபோல மாற தொடங்கின. இதன்படி, 100 ஏக்கர் நெற்பயிர்கள் கருகியுள்ளன.
இதுதொடர்பாக வேளாண் துறை அதிகாரிகளிடம், பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முறையிட்டனர். இதையடுத்து, அவர்களின் ஆலோசனையின்படி உரங்கள் தெளித்தும் பலன் கிடைக்கவில்லை. எனவே, குறிச்சியில் விநோத நோய் தாக்குதலால் சம்பா நெற்பயிர் பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு செய்து, தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உரம் தெளித்தும் பயனில்லை: இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி வி.குஞ்சிதம் கூறியது: பச்சை பசேலென வளர்ந்து வந்த நெற்பயிர்கள், அண்மைக்காலமாக தீயில் கருகியதுபோல மாறிவிட்டன. இதுகுறித்து, வேளாண்மைத் துறை அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர்களது ஆலோசனையின்படி உரங்கள் தெளித்தும் பலனில்லை.
» அருண்ராஜா காமராஜின் ‘லேபிள்’ வெப் சீரிஸ் மோஷன் போஸ்டர் வெளியீடு
» கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.12 - 18
நாற்றுக்காக ரூ.20 ஆயிரம், கருகிய நாற்றுகளை காப்பாற்ற ரூ.20 ஆயிரம் என 40 நாட்களில் இதுவரை ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவழித்துள்ளோம். பலரும் கடன் வாங்கி சாகுபடியில் ஈடுபட்டதால், பயிர்கள் கருகி வருவதைக் கண்டு மனம் வேதனை அடைகிறது. தமிழக அரசு, குறிச்சியில் நெற்பயிர் கருகிய வயல்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வதுடன், பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்து, இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
பாதிப்பு ஏன்? - இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் து.சிவவீரபாண்டியன் கூறியது: நெற்பயிரில் நோய் தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து, குறிச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியல் துறை பேராசிரியர் கே.ராஜப்பன், உழவியல் துறை இணைப் பேராசிரியர் ஆர்.நாகேஸ்வரி, மண்ணியல் துறை உதவிப் பேராசிரியர் கே.மணிகண்டன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பாதிக்கப்பட்ட வயல்களில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், அதிக அளவில் டிஏபி உரங்களைப் பயிருக்குத் தெளித்ததாலும், வயல்களில் பச்சைப் பாசி படர்ந்ததாலும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த பயிர்களைக் காப்பாற்ற டிஏபி உரம் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை, பரிந்துரைக்கப்பட்ட அளவு பயன்படுத்த வேண்டும்.
பச்சைப் பாசியை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 2 கிலோ நன்கு தூளாக்கப்பட்ட காப்பர் சல்பேட்டுடன், 25 கிலோ மணலை சேர்த்து வயலில் சீராகத் தூவ வேண்டும். அந்த வயல்களில் உள்ள ஆழ்குழாய் கிணற்றின் நீரை, ஆடுதுறையில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தில் பகுப்பாய்வு செய்து, அந்த முடிவின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் சாகுபடி முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
குறுவை சாகுபடி முடிந்தவுடன், பசுந்தாள் உரம் சாகுபடி மேற்கொள்ள வேண்டும். மேலும், வேளாண்மைத் துறையால் பரிந்துரைக்கப்படும் திரவ நுண்ணுயிர் உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர் என்றார்.