குரூப் 4 விடைத்தாள் நகலை உடனடியாக வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு 

By கி.மகாராஜன் 


மதுரை: குரூப் 4 தேர்வுக்கான விடைத்தாள் நகலை உடனடியாக வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கண்மணி, கீதா ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''தமிழகத்தில் 7301 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு 2022 மார்ச் மாதம் வெளியானது. அந்தாண்டு ஜூலை 24-ல் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 18 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். பின்னர் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் எங்கள் பெயர் இல்லை. தேர்வில் எங்களுக்கு 255 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் நாங்கள் தேர்வு செய்யப்படவில்லை. குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. குரூப் 4 தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளது. எனவே எங்களின் வினாத்தாளை ஓஎம்ஆர் சீட் வழங்க உத்தரவிட வேண்டும். எங்களுக்காக 2 பணியிடங்களை காலியாக வைக்க உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, ''குரூப் 4 தேர்வுக்கான விடைத்தாள் நகலை உடனடியாக வெளியிட வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE