தேவர் சிலைக்கான தங்கக் கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் வழங்கப்பட்டுள்ள தங்கக் கவசத்தை, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவாலய பொறுப்பாளரிடம் வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் தேவரின் உருவ சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் தங்க கவசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தங்கக் கவசம் குருபூஜையின் போது முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும். பின்னர் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் பாதுகாக்கப்படும். இதற்காக அதிமுக, தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் பெயரில் தனி வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதிமுக பொருளாளர் மற்றும் நினைவிட பொறுப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டு தங்ககவசத்தை பெறுவர்.

கடந்த ஆண்டு அதிமுக பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அப்பொறுப்பில் இருந்தும், அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் வங்கியில் உள்ள தங்க கவசத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரச்சினை எழுந்த போது ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு தேவர் குருபூஜை விழா அக். 27 முதல் 30 வரை நடைபெறுகிறது. தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தலையிட்டு பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் தேவர் கவசத்துக்கு உரிமை கோர முடியாது. எனவே, பிரதான மனுவை விரைவில் விசாரித்து எடுத்து உத்தரவு பிறப்பிக்கவும், அதுவரை அதிமுக- பசும்பொன் தேவர் நினைவாலய வங்கி கணக்கை அதிமுக பொருளாளர் என்ற முறையில் நான் இயக்குவதற்கு எனக்கு அனுமதி வழங்கியும் உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் செல்லபாண்டியன் வாதிடுகையில், ''அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். அதிமுக விதிமுறைகளை மீறி பொதுக்குழு கூட்டப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார். இன்னும் கட்சியின் சில ஆவணங்கள் பன்னீர்செல்வம் பெயரில் தான் உள்ளது. ஜெயலலிதா இருக்கும் வரை அவரின் நம்பிக்கைக்குரியவராக பன்னீர்செல்வம் இருந்தால். கட்சியின் பொருளாளராக இருந்ததால் தங்கக் கவசத்தை பெறும் பொறுப்பு பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டது. ஜெயலலிதா நினைத்திருந்தால் தங்கக் கவசத்தை பெறும் பொறுப்புக்கு வேறு நபர்களை நியமித்து இருக்கலாம். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் என்று தான் உள்ளது. இதனால் தேவர் தங்கக் கவசத்தை வேறு யாரிடமும் வழங்கக்கூடாது'' என்றார்.

அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன், தினேஷ்பாபு ஆகியோர் வாதிடுகையில், ''அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி மற்றும் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உள்ளனர். இதனால் வங்கியில் இருக்கும் தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவாலய நிர்வாகிகளிடம் தான் ஒப்படைக்க முடியும். அதிமுக வங்கி கணக்குகளில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என மாற்றப்பட்டுள்ளது'' என்றனர்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ''அதிமுக ஒருங்கிணைப்பாளர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றிருக்கலாம். அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் வங்கியில் உள்ள தேவர் தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவாலய பொறுப்பாளரிடம் வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE