விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: விருதுநகர் மாவட்டம் கங்கர்செவல் கிராமத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் அக்.3-ம் தேதி, நடந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவல் கிராமத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 3-10-2023 அன்று ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று தொழிலாளர்களுக்கு கொடுங்காயம் ஏற்பட்டு மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கங்கர்செவல், க.லட்சுமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (42) மற்றும் ராஜா ( 38) ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கணேசன், 7-10-2023 அன்றும், ராஜா, இன்றும் (10-10-2023) உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முத்தம்மாள், என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன், என்று முதல்வர் கூறியுள்ளார.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE