சென்னையில் 9 இடங்களில் ரூ.556 கோடி மதிப்பில் 3,238 குடியிருப்புகள்: அமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 9 திட்டப் பகுதிகளில் ரூ.556.60 கோடியில் 3238 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதியில் ரூ75.95 கோடி மதிப்பீட்டில் 450 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பெரியார் நகர் திட்டப்பகுதியில் ரூ.81.64 கோடி மதிப்பில் 448 புதிய குடியிருப்புகள், காந்தி நகர் திட்டப்பகுதியில் ரூ.83.50 கோடி மதிப்பீட்டில் 500 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

அதேபோல், வேம்புலியம்மன் திட்டப்பகுதியில் ரூ.32.62 கோடிமதிப்பில் 188 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பத்ரிக்கரை திட்டப்பகுதியில் ரூ.32.30 கோடியில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கங்கைகரைபுரம் திட்டப்பகுதியில் ரூ.29.85 கோடியில் 170 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ஆண்டிமான்ய தோட்டம் திட்டப் பகுதியில் ரூ118.53 கோடியில் 702 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், நாட்டான் தோட்டம் திட்டப் பகுதியில் ரூ.41.08 கோடி மதிப்பீட்டில் 252 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பருவா நகர் திட்டப் பகுதியில் ரூ.61.13 கோடியில் 360 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இந்த 9 திட்டப் பகுதிகளில் ரூ.556.60 கோடி மதிப்பில் 3238 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, வீட்டுவசதித்துறை செயலர் அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் பொ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE