தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்புகளுக்கு குஜராத் மாநில மருத்துவ குழு பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்புகளை குஜராத் மாநில மருத்துவ குழுவினர் பாராட்டியுள்ளனர் என்றுசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப்பை பார்வையிட வந்துள்ள குஜராத் மாநில மருத்துவக் குழுவினருடனான கலந்துரையாடல் கூட்டம் கிண்டி கலைஞர்நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது.

தொடர்ந்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் மூலம், திருவள்ளூர் மற்றும் ஆவடி ரயில்நிலையங்களுக்கு ‘Eat Right Station’ என்ற தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளைப் பார்வையிட குஜராத் மாநில மருத்துவத்துறை மருத்துவர்கள் 60 பேர் கடந்த 3-ம் தேதி சென்னை வந்தனர். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, நந்திவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், பூந்தமல்லி ஆரம்ப சுகாதார நிலையம், தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு நேரடியாக சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளைப் பார்வையிட்டனர். சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

தமிழகத்தின் சிறந்த மருத்துவ கட்டமைப்புகளையும், மகப்பேறு மருத்துவம், இருதய அறுவைசிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சைகள் சிறப்பாக செய்யப்படுவதையும் பாராட்டியுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, வரும் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் காப்பீட்டு திட்ட அட்டைகளை வழங்கும் முகாம்கள் நடத்தப்படும். தமிழகத்தில் நடப்பாண்டில் 4,745 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தேசிய மருத்துவ ஆணையம் தென் மாநிலங்களில் மேற்கொண்டு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாது என்று அறிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் இன்னும் பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை. இந்த மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்ற கோரிக்கைதொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இதை முதல்வரும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE