“மாமனிதரை இழந்துவிட்டோம்” - ஒரிசா பாலு மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார். அவரது மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

“தனது ஆய்வுகளின் மூலம் பண்டைத் தமிழர்களின் கடல்சார் தொன்மையை உலகிற்குப் பறைசாற்றிய ஆய்வாளர் ஒரிசா பாலு இயற்கை எய்தினார்.

கடற்கரைகளைத் தேடி ஆமைகள் வரும் கடல் நீரோட்டப் பாதைகளைப் பின்பற்றி தமிழ்க் கடலோடிகள் உலகம் முழுக்கச் சென்றனர் எனும் கருத்தாக்கத்தை முன்வைத்தவர். ஒரிசாவிற்கும் தமிழ்நாட்டிற்குமான பண்பாட்டுத் தொடர்புகள் குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்தவர். ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தைத் தொடங்கி தமிழரின் கடல்சார் மரபும், கடல் வளமும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

தமிழ் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் தீராத பற்று கொண்டிருந்த மாமனிதரை இழந்துவிட்டோம். அவருக்கு என் இதய அஞ்சலி” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி உறையூரில் பிறந்தவர் ஒரிசா பாலு. பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்ததால் ஒரிசா பாலு என அழைக்கப்பட்டார். தமிழர்களின் கடல்சார் தொன்மை தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர், தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE