பசும்பொன் தேவர் தங்க கவசத்துக்கு உரிமை கோரி திண்டுக்கல் சீனிவாசன் வழக்கு: ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: மதுரை வங்கி லாக்கரில் உள்ள பசும்பொன் தேவர் சிலை தங்க கவசத்துக்கு உரிமை கோரி அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் தேவரின் உருவ சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் தங்க கவசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தங்க கவசம் குருபூஜையின் போது முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும்.

பின்னர் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் பாதுகாக்கப்படும். இதற்காக அதிமுக, தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் பெயரில் தனி வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதிமுக பொருளாளர் மற்றும் நினைவிட பொறுப்பாளர் கையெழுத்திட்டு தங்க கவசம் பெறப்படும். கடந்தாண்டு அதிமுக பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அப்பொறுப்பில் இருந்தும், அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் வங்கியில் உள்ள தங்க கவசத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரச்சினை எழுந்தபோது ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக நிர்வாகிகள் பட்டியலுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு தேவர் குருபூஜை விழா அக். 27 முதல் 30 வரை நடைபெறுகிறது. தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் என்னிடம் தான் ஒப்படைக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தலையிட்டு பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் தேவர் கவசத்துக்கு உரிமை கோர முடியாது. எனவே, பிரதான மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்து உத்தரவு பிறப்பிக்கவும், அதுவரை அதிமுக- பசும்பொன் தேவர் நினைவாலய வங்கி கணக்கை அதிமுக பொருளாளர் என்ற முறையில் இயக்குவதற்கு எனக்கு அனுமதி வழங்கியும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, மனுவுக்கு பதிலளிக்க 2 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்றார். இதையேற்க மறுத்த நீதிபதி, இது தொடர்பான வழக்குகளில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் விசாரணை அக். 10-க்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதற்குள் பதிலளிக் வேண்டும் என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE