மயிலாடுதுறை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மயிலாடுதுறை அருகே தில்லையாடி கிராமத்தில் பட்டாசு கடையில் நிகழ்ந்த விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் காவல் சரகம், தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் இன்று (அக்.4) மதியம் வெடிகளை பார்சல் செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம், மயிலாடுதுறையைச் சேர்ந்த மதன், மகேஷ் மற்றும் ராகவன் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று (அக்.4) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி கிராமத்தில் காத்தாயி அம்மன் கோயில் அருகில் மோகன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நாட்டு வெடிகள், வாணவெடிகள் உள்ளிட்ட வெடி வகைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு சுப துக்க நிகழ்ச்சிகளுக்கும், தீபாவளி பண்டிகையின்போதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை மதியம் இந்த வெடி குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அங்கிருந்த வெடிகள் அனைத்தும் வெடித்து சிதறின. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த விபத்தில் வெடி தொழிற்சாலையில் பணியாற்றிய நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். உடலின் பாகங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர அளவுக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE