திருவட்டாறு அருகே சோகம்: மின்சாரம் தாக்கி தாய், மகன், கர்ப்பிணி மகள் மரணம்

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் நேற்று மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், கர்ப்பிணி மகள் ஆகியோர் மரணம் அடைந்தனர். திருவட்டாறை அடுத்துள்ள ஆற்றூர் தொப்பவிளையைச் சேர்ந்தவர் சேம் (50). வாகன ஓட்டுநர். இவரது மனைவி சித்ரா(47).

இவர்களுக்கு அஸ்வின் (19) என்ற மகனும், நீது ஆதிரா (24) என்ற மகளும் இருந்தனர். ஆதிராவுக்கு திருமணமாகி பிரசவத்துக்காக தாயார் வீட்டுக்கு வந்திருந்தார். அஸ்வின் நாகர்கோவில் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

குமரி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. சேம் வெளியே சென்றிருந்த நிலையில், தாய், மகன், மகள் ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்துள்ளனர். வீட்டின் சுற்றுச்சுவரில் மின்கசிவு ஏற்பட்டு இருந்திருக்கிறது. இதை அறியாமல், நேற்று மாலை அஸ்வின் வீட்டுக்கு வெளியே சென்றபோது சுற்றுச்சுவரில் அவரது கைபட்டதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

இதைப்பார்த்த சித்ரா தனது மகனைக் காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்துக் கொண்டிருந்த கர்ப்பிணியான ஆதிராவும் அவர்களைக் காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது. 3 பேரும் தூக்கி வீசப்பட்டு வெகு நேரமாக அங்கே கிடந்துள்ளனர்.

இரவு 7 மணியளவில்தான் இவர்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்துள்ளனர். பின்னர் 3 பேரையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இவர்கள் மூன்று 3 பேரும் இறந்து விட்டதாகக் கூறினர்.

திருவட்டாறு போலீஸார் விசாரணை நடத்தினர். வீட்டின் மேல் பதித்திருந்த தகரக்கூரை மின்வயரில் பட்டதால் சுவரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது தெரியவந்தது. ஒரே வீட்டில் 3 பேர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் ஆற்றூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE