பிஹார் மாநில நடவடிக்கைக்கு வரவேற்பு; தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: பிஹார் மாநிலத்தில் நடைபெற்ற சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வரவேற்பு அளித்துள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: பாமக நிறுவனர் ராமதாஸ்: சாத்தியமே இல்லாதது என்பது போன்ற மாயை ஏற்படுத்தி வந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது பிஹார் மாநில அரசு. பிஹாரில் ஏற்றப்பட்டுள்ள சமூகநீதி விளக்கு வெகுவிரைவில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒளி கொடுக்கும். தமிழக அரசும் சாதிவாரி மக்கள்தொகைகணக்கெடுப்பை நடத்தும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண் டும்.

திக தலைவர் கி.வீரமணி: இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி சாதனை படைத்துள்ளது பிஹார் மாநில அரசு. எந்தெந்த பிரிவினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் எத்தனை விழுக்காடு கிடைத்துள்ளது என்பது இதனால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிஹாரைப் பின்பற்றி மற்ற மாநிலங்களும் சாதிவாரிக் கணக் கெடுப்பை நடத்த வேண் டும்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: சுதந்திரம்அடைந்து 75 ஆண்டுகளாகியும் கல்வியில், வேலைவாய்ப்பில், அரசியல் பிரதிநிதித்துவத்தில் உரிய இடங்களைப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பெற முடியாத நிலை தொடர்ந்து வருவது மாபெரும் சமூக அநீதியாகும். எனவே பிஹார் மாநில அரசு மேற்கொண்டதைப் போலவே தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும்,சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தமுடியும் என பிஹார் மாநிலம்உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கணக்கெடுப்பு இல்லாமல் சமூகநீதிமுழுமையடையாது. தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

தவாக தலைவர் தி.வேல்முருகன்: சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், சாதிகளிடையே சமநிலையை உருவாக்க முடியும். அந்தவகையில் நாட்டுக்கே வழிகாட்டும் விதமாக, பிஹார் அரசு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்ட பலரும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த வலியுறுத்தி யுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE