எம்.எஸ்.சுவாமிநாதன் படித்த கும்பகோணம் பள்ளியில் முன்னாள் மாணவர்களான எம்.பி, எம்எல்ஏ மலரஞ்சலி

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் படித்த சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்களான எம்.பி, எம்.எல்.ஏ மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அவரது உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணத்தை பூர்விகமாகக் கொண்டவர் வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் (98). இவர் 1938-ம் ஆண்டு முதல் 1940-ம் ஆண்டு வரை 9-ம் மற்றும் 10-ம் வகுப்பைச் சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியிலும், பின்னர் கல்லூரிப் படிப்பை அரசு ஆடவர் கல்லூரியில் படித்துள்ளார். இவர் வேளாண்மைத் துறையில் பல்வேறு சாதனைகள் செய்தவர். பட்டினி இல்லாத இந்தியா தான் என் கனவு என கூறிய இவர் கடந்த மாதம் 28-ம் தேதி காலமானார்.

இந்த நிலையில், அவர் படித்த பள்ளியான சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு இந்தப் பள்ளி முன்னாள் மாணவர்களான எம்.பி. செ.ராமலிங்கம் மற்றும் எம்.எல்.ஏ சாக்கோட்டை, க.அன்பழகன் ஆகியோர் தலைமை வகித்து, மலர் தூவி அவரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிராத்தனை மேற்கொண்டனர். இதில் பள்ளி தாளாளர் ஏ.அபூர்வசாமி, தலைமையாசிரியர் ஜி.ஆரோக்கிய ராஜ், உதவித் தலைமையாசிரியர் எச்.ஆண்ட்ரூஸ், பழைய மாணவர் சங்கத் தலைவர் பி.செந்தில், துணைத் தலைவர் யூ.ரோசா ரியோ மற்றும் அனைத்து மாணவர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE