காவிரி விவகாரத்தை பிரச்சினையாக்கும் பாஜக முயற்சி வெற்றிபெறாது: கே.எஸ்.அழகிரி கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: காவிரி நீர் விவகாரத்தை பிரச்சினையாக்க பாஜக முயற்சிக்கிறது. அதன் முயற்சி பெற்றிபெறாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னை சத்யமூர்த்திபவனில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி பிரச்சினையில் எல்லாம் முறையாக நடந்து கொண்டிருக்கிறது. பாஜக மட்டும் நாடகமாடி வருகிறது. நமக்கு எவ்வளவு காவிரி நீர் வரவேண்டும் என்பதை உச்ச நீதிமன்றமும், காவிரி ஆணையமும் தெளிவாக கூறியிருக்கிறது. அவை கூறுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். மற்றவர் கூறுவதை பற்றி நமக்கு கவலை இல்லை.

முதல்வர் ஸ்டாலின் ராஜதந்திரத்தோடு தெளிவாக காவிரி விவகாரத்தை கையாண்டு வருகிறார். முதலில் 15 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. பின்னர் 5 ஆயிரம், இப்போது 4 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. முதல்வர் நடவடிக்கை எடுத்தால் தண்ணீர் கொண்டு வரலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். முதல்வர் நடவடிக்கையால்தான் 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.

ஆனால் கர்நாடக பாஜகவின் முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் கலவரத்தை உருவாக்கினர். அதை அண்ணாமலை எதிர்க்கவில்லை. தண்ணீர் திறந்துவிடும் போதெல்லாம் பிரச்சினை செய்வது பாஜக தான். ஆனால் அந்த போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை. தமிழகத்துக்கு வேண்டிய நீரை தமிழக அரசு பெறும். கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அரசும் உரிய நீரை வழங்கும். இதை பிரச்சினையாக்க பாஜக முயற்சிக்கிறது. அவர்களின் முயற்சி வெற்றிபெறாது.

எல்லா இடங்களிலும் இனப் பிரச்சினையை எழுப்பி ரத்தம் சிந்த வைப்பதுதான் சீமானின் கொள்கை. அதை வன்மையாக கண்டிக்கிறோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE