பயிர் இழப்பீட்டு அறிவிப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: கடந்த சம்பா தாளடி பருவத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அறுவடை நேரத்தில் பருவம் தவறி பொழிந்த மழையால் ஏக்கர் கணக்கில் நெற்கதிர்கள் மூழ்கின. பல பகுதிகளில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.5,400 மட்டும் அரசு நிவாரணமாக வழங்கியது.

ஒரு ஏக்கர் நெல் சாகுபடியின் மூலம் ரூ.40 ஆயிரம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நிலையில், மீதமுள்ள இழப்பீடு தொகை காப்பீடு திட்டத்தின் மூலம் பின்னால் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த செப்.21-ம் தேதி, பயிர் இழப்புக்குள்ளான 7 லட்சம் ஏக்கருக்கு மட்டும் ரூ.560 கோடி காப்பீடு திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த பருவத்துக்கான காப்பீடு திட்டத்தில் விவசாயிகளின் பங்குத் தொகையாக ரூ.120 கோடியும், மத்திய அரசின் பங்காக ரூ.874 கோடியும், தமிழக அரசின் பங்காக ரூ.1,325 கோடியும் என கூடுதலாக ரூ.2,319 கோடி காப்பீடு நிறுவனங்கள் காப்பு தொகையாக பெற்றுள்ளன. அப்படியிருக்க விவசாயிகளுக்கு ரூ.560 கோடி மட்டுமே வழங்கப்படுமானால் மீதமுள்ள ரூ.1,739 கோடியை இந்த நிறுவனங்களே எடுத்துக் கொள்ளும். பெரும்பாலும் இப்படித்தான் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். விவசாயிகளின் பயிர்இழப்பு பாதுகாப்புக்காக அமல்படுத்திய காப்பீடு திட்டம் தற்போது காப்பீடு நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக மாறிவிட்டது.

எனவே தமிழக அரசு, சில மாநிலங்களைப் போல் மத்திய அரசின் பங்கு தொகையுடன் காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். தற்போது அறிவித்துள்ள காப்பீடு திட்ட இழப்பீடு அறிவிப்பை மறுஆய்வு செய்திட வேண்டும். அதேபோல டெல்டா மாவட்டங்களில் மண் மற்றும் நீரை பொறுத்து குறையும் மகசூலுக்குரிய இழப்பீடையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE