கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை உதைத்த ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ, பிடிஓ முன்னிலையில் கேள்வி கேட்ட விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

காந்தி ஜெயந்தியையொட்டிவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் உள்ள கங்காகுளம் பாப்பாத்தி அம்மன் கோயில் வளாகத்தில் கிராம சபைக் கூட்டம்நேற்று நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ் (அதிமுக)தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில், வேப்பங்குளம் விவசாயி அம்மையப்பன் பேசும்போது, "கிராமங்களில் சுழற்சி முறையில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டுமென உள்ளாட்சித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த முறை தண்ணீர் தினத்தில் கிராம சபைக் கூட்டம் இங்குதான் நடந்தது. தற்போதும் இதே கிராமத்தில்தான் நடக்கிறது. இதுகுறித்து முன்கூட்டியே வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆக. 17-ம் தேதி ஆட்சியர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவுக்கு பிள்ளையார்குளம் பகுதி மக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில், நிர்வாக நலன் கருதி ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?’" என்றுகேள்வி எழுப்பினார்.

அப்போது ஊராட்சி செயலர்தங்கபாண்டியன், "அதுகுறித்து நீ ஏன் பேசுகிறாய்?" என்று கேட்டபடி,தரையில் அமர்ந்திருந்த அம்மையப்பனை காலால் எட்டி உதைத்தார்.அவரது ஆதரவாளர்களும் அம்மையப்பனைத் தாக்கினர்.

மேலும், "நான் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று, பணியில் தொடர்கிறேன். என்னைப் பற்றிஎப்படிப் பேசலாம்?" என்று கூறிய தங்கபாண்டியன், அம்மையப்பனை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

அப்போது அம்மையப்பனுக்கு ஆதரவாக, அங்கிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் ஆகியோருடன் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பையும் எம்எல்ஏ மான்ராஜ், பிடிஓ மீனாட்சி ஆகியோர் சமாதானம் செய்தனர். மக்கள் எதிர்ப்பு காரணமாக கிராம சபைக் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில்,ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, வன்னியம்பட்டிபோலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவுறுத்தலின் பேரில், தங்கபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE