வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

அரூர்: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு வரவேற்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காந்தி ஜெயந்தியையொட்டி தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பே.தாதம்பட்டி ஊராட்சி சார்பில் கூக்கடப்பட்டியில் கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது. ஊராட்சித் தலைவர் பாரதி ராஜா தலைமை வகித்தார்.

பே.தாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் சிறை தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு, அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையை விரைந்து வழங்க வேண்டும் என்றும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பிற குடும்பத்தினர் குறித்தும் ஆய்வு செய்து அவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். அரசுத் திட்டங்களில் வாச்சாத்தி கிராமத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊராட்சி செயலர் ரங்க நாதன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE