கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் 2-வது நாளாக ரயில்கள் ரத்து: சிரமத்துக்குள்ளான பயணிகள்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை நகரத்தை புறநகர் பகுதிகளுடன் இணைக்கும் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் சேவை இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் மின்சார ரயில் சேவையில், ஏதாவதுமாற்றம் இருந்தால், ரயில்வே நிர்வாகம் முன்னதாக அறிவிப்பு வெளியிடும். அதன் அடிப்படையில், பொதுமக்கள் மாற்று போக்குவரத்தை தேர்ந்தெடுப்பர்.

ஆனால், எந்தவித முன்அறிவிப்பின்றி, சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை 22 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். ரயில் சேவை ரத்து செய்யப்பட்டால், முன் அறிவிப்பு செய்யரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், இதே வழித்தடத்தில் நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை41 மின்சார ரயில்கள் 2-வது நாளாகநேற்றும் நேற்று ரத்து செய்யப்பட்டன. ரயில்வே தரப்பில் நேற்று முன்தினம் முன்அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும், தாம்பரம், மாம்பலம், கிண்டி, எழும்பூர் உள்பட பல்வேறு ரயில் நிலையங்களுக்கு பயணிகள்வந்து, திரும்பிச் சென்றனர். தொடர்ந்து, மெட்ரோ ரயில்,பேருந்து என மாற்று போக்குவரத்துக்காக, சில கிலோ மீட்டர் தொலைவு வரை நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதுபோன்ற காலகட்டங்களில் ரயில் நிலையங்களில் இருந்து பேருந்து வசதி ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: சென்னை கடற்கரை-தாம்பரம் உள்பட முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவை ரத்து செய்யப்படும்போது, அதற்கு மாற்றாக பேருந்து சேவை அதிகரிக்கவும், ரயில்நிலையங்களில் இருந்து இயக்கவும் வேண்டும்.

இதன்மூலமாக, பயணிகள் விரைவாக செல்லமுடியும். காலவிரயம் தவிர்க்கப்படும். இதற்காக, போக்குவரத்து கழகத்துடன் ரயில்வே நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதல்பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE