தாயாரின் ஓய்வூதிய பணப்பலன் கேட்டு மகன் வழக்கு தாக்கல் செய்ய முடியாது - உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: தாயாரின் ஓய்வூதிய பணப்பலன்களை கேட்டு மகன் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்த ராஜேஷ்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: காஞ்சிரங்கோடு அரசுப் பள்ளியில் என் தாயார் 1990-ல் துப்புரவு பணியாளராக சேர்ந்தார். அவரை பணி நிரந்தரம் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கில் என் தாயாரை 2000ம் ஆண்டிலிருந்து 2010 வரை எனது தாயாரை பணியை வரன்முறைப்படுத்தி உரிய பணப்பலன்களை வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக கல்வித்துறை சார்பில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனுக்கள் தள்ளுபடியானது.

தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் என் தாயார் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக உள்ளார். எனவே என் தாயாரின் பணியை 1990 முதல் வரன்முறைப்படுத்தி அவருக்கு ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை 18 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எல்.விக்டோரியாகவுரி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தனது தாயாருக்காக அவர் வழக்கு தாக்கல் செய்து, அவரே நேரில் ஆஜராகி வாதிட முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இதுபோன்ற மனுக்களை ஆரம்ப நிலையிலேயே திரும்ப அனுப்ப வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE