நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு?

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை (அக்.3) நடைபெற இருந்த அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில், கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று டெல்லி சென்றார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரங்கள், அதிமுக உடனான கூட்டணி முறிவு மற்றும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை உள்ளிட்ட விவரங்கள் குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாளை (அக்.3), சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அண்ணாமலை தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருந்தது. அதிமுக கூட்டணி முறிவுக்குப் பிறகு நடைபெற இருந்த இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது, அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், நாளை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE