காவிரி விவகாரம் | தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? - பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டாதது ஏன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், காவிரி விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "காவிரி பிரச்சினையில், கர்நாடகத்தில் இருப்பவர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து அவர்களது உணர்வை வெளிப்படுத்துகின்றனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியிருக்கின்றனர். அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்தி உள்ளன. ஆனால், தமிழகத்தில் தமிழக முதல்வர் குறைந்தபட்சம் ஏன் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட கூட்டவில்லை? எனவே, தமிழக விவசாயிகளைக் காப்பாற்றவும், தமிழ் உணர்வை நிலைநாட்டவும் தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

கர்நாடகத்தில் இன்று காங்கிரஸ்தான் ஆட்சியில் இருக்கிறது. எனவே, தமிழக அரசியல் தலைவர்களை அழைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, கர்நாடகத்துக்கு அழுத்தம் கொடுத்து, தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி தண்ணீரைப் பெற்றுத்தர தமிழக முதல்வர் அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE