''பிரதமர் வேட்பாளர் இல்லாதது இண்டியா கூட்டணிக்கு பிரச்சினை இல்லை'': சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பிரதமர் வேட்பாளரை அறிவிக்காதது இண்டியா கூட்டணிக்கு பிரச்சினையாக இருக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தேர்தலை நாடு எதிர்கொள்ள உள்ள நிலையில் இண்டியா என்ற கூட்டணி அமைக்கப்பட்டு, அதற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மாற்று அரசு வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இதனால் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அச்சமடைந்து உள்ளன. அதனால்தான் அவர்கள் நிதானம் இழந்து பேசி வருகின்றனர்.

இந்தியா காப்பாற்றப்பட வேண்டும் என்றால் பாஜக அரசு அகற்றப்பட வேண்டும். இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டணியில உள்ள அந்தந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை விரைந்து தொடங்க வேண்டும். மாநிலத்துக்கு மாநிலம் பிரச்சினைகள் வரும். யதார்த்தப் பூர்வமாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு கட்சியும் அதிக இடங்களில் போட்டியிட விரும்புவர். இன்றைய சூழலில் பாஜகவை வீழ்த்த எதிர் வாக்குகளை ஒன்று திரட்ட இண்டியா கூட்டணி கட்சியினர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும்.

கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தி தற்போது எம்பியாக உள்ளார். அதே நேரத்தில் அங்கு இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. காங்கிரஸும் தொகுதிகளில் யாரை நிறுத்துவார்கள் என தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வயநாட்டில் ராகுல் போட்டியிடக் கூடாது என்பதல்ல எங்கள் நிலைப்பாடு. எங்கு யார் போட்டியிடுவார் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். இன்றைய அரசியல் சூழலை கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும். தமிழகத்தில் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. கோவை தொகுதி ஒதுக்கீடு குறித்த செய்த உண்மையல்ல.

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு மாநிலத் தலைமை பதில் சொல்வார்கள். அண்ணாமலை, வெங்காயம் குறித்து பேசியதற்கு பதிலளிக்க ஒன்றுமில்லை. பெரியாரை குறித்து கேட்டால் நிறைய கூறுவேன். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவேன் என்று பேசி வருகிறார். அவர் பேசட்டும். ஆனால், கள நிலவரம் அவருக்கு சாதமாக இல்லை. அதனால் எதிர்கட்சிகளை கடுமையாக பாஜக தரப்பு வசைபாடுகிறது. மும்பை கூட்டத்தில் 27 கட்சிகள் வரை வந்துள்ளனர். மேலும் ஓரிரு கட்சிகள் வருவார்கள். இண்டியா கூட்டணி வெற்றி பெற்று பாஜக வீழ்ச்சியடையும் போது பிரதமரை தேர்ந்தெடுப்போம். அது கூட்டான முடிவாக இருக்கும். எந்த குழப்பமும் இண்டியா கூட்டணியில் வராது. பிரதமர் முகம் இண்டியா கூட்டணியில் பிரச்சினை இல்லை." என்று ராஜா கூறினார். பேட்டியின் போது மாநில செயலர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன், கட்சியின் துணைச் செயலர் சேது செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE